குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் கொண்டு வந்திருக்கும் சட்டத்திருத்த ஆதரவு பிரச்சார குறுநூல், ’குடியுரிமை சட்டத் திருத்தம் 2019 முஸ்லீம்களுக்கு எதிரானதா?’ என்று தலைப்பிடப்பட்டு வெளியாகி உள்ளது. இந்த குறுநூலின் மூலம் இவர்கள் இந்த சட்டத்திருத்தம் முஸ்லீம்களுக்கு எதிரானதாக இருக்கவில்லை என்பதையே நிறுவப் போகிறார்கள் என்று சொன்னால், தலைப்பிலேயே அதை ‘குடியுரிமை சட்டத் திருத்தம் 2019 முஸ்லீம்களுக்கு எதிரானதல்ல’ என்று தெரிவிப்பதைத் தவிர்த்து விட்டு, வாசிப்பவர்களிடம் அந்தக் கேள்வியை முன்வைப்பதன் மூலமே, இவர்களுடைய நோக்கம் தெளிவாகி விடுகிறது. முழுக்க முழுக்க முஸ்லீம்கள் மீது அவதூறு சுமத்தி, இந்த நாடு முஸ்லீம்களுக்கானது அல்ல என்று கூறுகின்ற நோக்கிலேயே இந்த நூல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதே நிஜம்.
பாஜகவினரால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த குறுநூலில், ’சுதந்திர இந்தியாவின் மதவாரி மக்கள் தொகையையும், பாகிஸ்தானின் மதவாரி மக்கள் தொகையையும் பார்த்தால் உண்மை விளங்கி விடும். 1947இல் பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை 18 சதவிகிதம். தற்போது 2.6 சதவீதம்தான். 1947 வங்காள தேசத்தில் (அப்போதைய கிழக்கு பாகிஸ்தான்) இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை 22%. ஆனால் தற்போது 8.5 சதவிகிதம்தான். ஆப்கானிஸ்தானில் மீதமிருந்த மாற்று மதத்தினரின் எண்ணிக்கை எட்டு சதவிகிதம். இன்று 0.5 சதவிகிதம் மட்டுமே. மாற்று மதத்தவர் மீது இவர்களின் துன்புறுத்தலுக்கு மத மாற்றமே முக்கிய காரணம். மாறாக 47இல் 9.5 சதவீத இந்திய முஸ்லீம்கள் இன்று 14.5 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறார்கள். எனவே இந்நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் கடமை இந்தியாவுக்கு இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் கூறுவதைப் போல, ’இந்நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் கடமை இந்தியாவுக்கு இருக்கிறது’ என்றில்லாமல், அனைத்து நாடுகளிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இந்தியா நிற்கும் என்ற கருத்துதானே மனிதநேயம் மிக்கவர்கள் வைக்கின்ற கருத்தாக இருக்க முடியும். மதரீதியாக இந்த மூன்று நாடுகளை மட்டும் பிரித்து வைத்துக் கொண்டு, ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான கடமை என்று பசப்புவது, அப்பட்டமாக முஸ்லீம்களைப் பாதுகாக்கின்ற கடமை இந்தியாவிற்கு இல்லை என்று குறிப்பிடுவதாகவே இருக்கிறது.
மக்கள்தொகை குறித்து இவர்களுடைய வாதத்தில் உள்ள தகவல்களின் உண்மைத்தன்மை என்ன? இவ்வாறான வாதங்களின் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக இவர்கள் அளிக்கின்ற தரவுகளை முதலில் பார்க்கலாம்.
மேலிருக்கும் படங்களில் தமிழில் இருப்பது இவர்கள் வெளியிட்டுள்ள அந்த குறு நூலில் இருக்கிறது. அதற்கருகில் வைக்கப்பட்டுள்ள படம் இவர்களுடைய ஆதரவாளர்களால் இணையத்தில் உலாவ விடப்பட்டிருக்கின்றது. அந்த குறுநூலில் குறிப்பிடப்பட்டிருந்த வாசகத்தைத் திரும்ப ஒருமுறை வாசித்துப் பாருங்கள். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் குறித்த எந்தவொரு தரவுகளின் அடிப்படையிலும் இல்லாத வெவ்வேறு தகவல்களை உங்களுக்குத் தருகின்ற இவர்களின் ஏமாற்று வித்தை உங்களுக்குத் தெரிய வரும்.
வெவ்வேறு அளவுகோல்கள்
இவ்வாறான தகவல்களைத் தருவதன் மூலம், இவர்கள் நிரூபிக்க முயல்கின்ற கருத்து முற்றிலும் அடிப்படையே இல்லாததாகும். தங்களுடைய ஒப்பீட்டில் பாகிஸ்தானுக்கு 1947ஆம் ஆண்டு, வங்கதேசத்திற்கு 1951ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானுக்கு 1970கள் என்று வெவ்வேறு ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். ஏன் இந்த வெவ்வேறான அளவுகோல்கள் கையாளப்படுகின்றன? 1947 பாகிஸ்தானை 2011 பாகிஸ்தானுடன் ஒப்பிடுவதும், 1951ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானை 2011 வங்கதேசத்துடன் ஒப்பிடுவதும் முற்றிலும் ஏமாற்று வித்தை என்பதை பொதுஅறிவு கொண்டவர்கள் யாராலும் மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இவர்களுடைய பிரச்சாரத்தில் ஆப்கானிஸ்தானில் 1970களில் இருந்த மதச் சிறுபான்மையினர் பற்றி குறிப்பிடுவது இவையனைத்தையும்விட இன்னும் மோசமாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் இந்திய சுதந்திரம் மற்றும் தேசப் பிரிவினை ஆகியவற்றுடன் என்ன தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை, குறைந்தபட்சம் இவர்கள் ஆப்கானிஸ்தானிற்கும், பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு என்பதையாவது விளக்க முன்வருவார்களா? இவர்கள் கூறுவது போன்று நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை நிரூபிப்பதற்கு, மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த தரவுகள் எதுவுமே நமக்குத் தேவைப்படாது. இருந்தாலும் இவர்கள் கொண்டிருக்கும் நோக்கத்தை வெளிக் கொண்டு வருவதற்கு, இவர்கள் என்ன சொல்கிறார்கள், அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
தேசப்பிரிவினை
முற்றிலும் நியாயமற்ற, போதிய ஆதாரங்களற்ற இவர்களுடைய வாதங்களைப் புரிந்து கொள்ள, சில வரலாற்று நிகழ்வுகளை முதலில் நாம் கருத்தில் கொள்வது நல்லது. 1947 ஆகஸ்ட் 14 அன்று 42,35,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டிருந்த இந்தியாவிலிருந்து மேற்கு பாகிஸ்தான் (8,04,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு), கிழக்கு பாகிஸ்தான் (1,44,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு) என்று இரண்டு பகுதிகளை உள்ளடக்கிய தனிநாடாக பாகிஸ்தான் பிரிந்து சென்றது. 1947 ஆகஸ்ட் 15 அன்று மிஞ்சியிருந்த 32,87,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் இந்திய ஒன்றியம் உருவானது. 1971 மார்ச் 26 அன்று கிழக்கு பாகிஸ்தானில் தொடங்கிய போரின் மூலம் உருவான வங்கதேசம் 1972ஆம் ஆண்டு பல நாடுகளாலும், 1974ஆம் ஆண்டு பாகிஸ்தானாலும் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்திய ஒன்றியம், பாகிஸ்தான், வங்கதேசம் என்று மூன்று நாடுகளாக இந்தியா மாற்றம் அடைந்து விட்டது. இருதேசங்கள் என்று இவர்கள் எல்லாம் சேர்ந்து ஆரம்பித்து வைத்த பிரச்சனை, இறுதியில் மூன்று தேசங்களில் போய் நின்றது.
1941ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிளவுபடாத இந்தியாவில் இருந்த மக்கள்தொகையை எடுத்துக் கொண்டு, 1947இல் பாகிஸ்தானில் இருந்த முஸ்லீம்கள் அல்லாத சிறுபான்மையினர் (ஹிந்துக்கள்) குறித்த மக்கள்தொகை என்று இவர்கள் குறிப்பிடுவது முற்றிலும் ஏமாற்றுகின்ற செயலே. 1947இல் நடந்த ரத்தம் தோய்ந்த கலவரங்களுக்குப் பின்னர் நாடு பிரிவினை அடைந்த பிறகு இருந்ததாகக் கூறப்படுகின்ற பாகிஸ்தானின் மதஅடிப்படையிலான மக்கள்தொகை கணக்கு எவ்வித ஆதாரமுமற்றதாகும். அடுத்து 1951ஆம் ஆண்டு வங்கதேச மக்கள்தொகையாக குறிப்பிடப்படுவது, உண்மையில் சுதந்திரமடைந்திருந்த பாகிஸ்தானின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்த 1951ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட, கிழக்கு பாகிஸ்தானின் மக்கள் தொகையே ஆகும்.
பொய்யான தகவல்கள்
1947ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்ற போது, கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் என்று இரண்டு வெவ்வேறு பகுதிகளை உள்ளடக்கியதாகவே அந்தப் பிரிவினை இருந்தது நமக்குத் தெரியும். இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானில் முதன்முதலாக 1951ஆம் ஆண்டில்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அப்படியெனில் இவர்கள் குறிப்பிடுகின்ற 1947இல் பாகிஸ்தானில் இருந்த மதரீதியான மக்கள்தொகை என்பது பிரிவினைக்கு முந்தைய ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனெனில் பிரிவினை நடந்த 1947ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக முழுமையான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்திருக்கவில்லை. அதற்கான வாய்ப்புகள் இருந்திருக்காது. அதற்கான ஆவணங்களோ, சான்றுகளோ எதுவுமில்லாத போது, இவர்களுக்கு மட்டும் அவை எங்கிருந்து கிடைத்தன என்பது தெரியவில்லை. இவர்களுடைய வாதங்கள் முழுக்க முழுக்க ஆதாரங்கள் எதுவுமின்றி தங்கள் தேவைகளுக்கேற்றவாறு வேண்டுமென்றே திரித்து தரப்படுகின்ற பொய்யான தகவல்களால் நிரம்பி வழிகின்றன இவர்களால் முன்வைக்கப்படுகின்ற இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க தவறான அல்லது அரைகுறையான இந்த தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. .
மேற்கு பாகிஸ்தானும், கிழக்கு பாகிஸ்தானும்
பிரிவினைக்குள்ளான பிறகு பாகிஸ்தானில் 1951ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, மதரீதியான மக்கள் பிரிவுகள் மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் சமமாக இருக்கவில்லை என்பதையே நமக்கு காட்டுகின்றது. முஸ்லீம்கள் அல்லாத சிறுபான்மையினரின் எண்ணிக்கை மேற்கு பாகிஸ்தானில் (தற்போதைய பாகிஸ்தான்) 3.44 சதவீதமாகவும், கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) 23.20 சதவீதமாகவும் இருந்தது. அதாவது இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, 1951ஆம் ஆண்டில் இன்றைய பாகிஸ்தானில் (மேற்கு பாகிஸ்தானில்) 96.56 சதவீதம் முஸ்லீம்கள் இருந்த நிலையில், இன்றைய வங்கதேசத்தில் (கிழக்கு பாகிஸ்தானில்) முஸ்லீம்கள் 76.80 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தனர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற முஸ்லீம்களின் எண்ணிக்கையை (14.2 சதவீதம்) விடக் கூடுதலான அளவிலேயே இன்றைய வங்கதேசத்தில் (23.20 சதவீதம்), அதாவது கிழக்கு பாகிஸ்தானில் ஹிந்துக்கள் இருந்தனர். மேற்கு பாகிஸ்தானில் இருந்த சில மாகாணங்களில் முழுக்க முழுக்க முஸ்லீம்கள் மட்டுமே இருந்த நிலைமை போன்று, கிழக்கு பாகிஸ்தானில் நிலைமை இருந்திருக்கவில்லை.
பிரிவினையின் போது மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானை உள்ளடக்கியதாக இருந்த ஒட்டுமொத்த பாகிஸ்தானில் 14.2 சதவீதத்தினரே முஸ்லீம் அல்லாதவர்களாக இருந்தனர் என்ற உண்மையை மறைத்து, பாகிஸ்தானில் 18 சதவீதம், வங்கதேசத்தில் 22 சதவீதம் என்று பொய்களை மட்டுமே பரப்பி மக்களைக் குழப்புகின்ற வகையிலேயே இவர்களின் தொடர் பிரச்சாரங்களில் உள்ள புரட்டுகள் இருக்கின்றன.
அமித்ஷா கூறுவது உண்மையல்ல
உள்துறை அமைச்சரான அமித்ஷாவும் குடியுரிமை சட்டத்திருத்தத்தின் மீது மக்களவையில் நடந்த விவாதத்தின் போது, 1947இல் வங்கதேசத்தில் 23 சதவீதமாக இருந்த மதச் சிறுபான்மையினரின் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டு 3.7 சதவீதமாக குறைந்திருப்பதாக கூறியிருந்தார். மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போதும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்த சிறுபான்மையினர் எவ்வாறு மறைந்து போனார்கள் என்ற கேள்வியை அவர் எழுப்பியிருந்தார். நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா கூறுவதில் எள்ளளவும் உண்மை இருக்கவில்லை. அமித்ஷா குறிப்பிடுகின்ற பகுதியில். வங்கதேசம் என்ற தனிநாடாக 1971இல்தான் கிழக்கு பாகிஸ்தான் மாற்றமடைகிறது. அப்படியிருக்கும் போது, கிழக்கு பாகிஸ்தானை வங்கதேசமாக முன்வைத்து பொய்களைக் கூறுவது, இவர்களுக்கு ஒன்றும் புதிய செயலல்ல. இவர்களுடைய கருத்துக்கள் பொய் என்று நிறுவப்படும் போது எவ்வித குற்ற உணர்வுமின்றி அதை மிக எளிதாக கடந்து விடுகின்ற ’திறமை’ இவர்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. இவர்கள் தருகின்ற இத்தகைய பொய்யான தகவல்கள் ஹிந்துக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பிவிட மட்டுமே என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
”நாடு பிரிவினை அடைந்த பிறகு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வசித்து வருகின்ற முஸ்லீம்கள் அல்லாதவர்களின் (ஹிந்துக்களின்) எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. 1951ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் 22 சதவீதம் இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை, 2011இல் 8.5 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவில் 9.8 சதவீதமாக இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை 14.2 சதவீதமாக அதிகரித்திருக்கிறது”. இதுதான் இவர்கள் கூற வருவது. இதையே இன்னும் கொஞ்சம் அதிகமாக நீட்டித்து மிக விரைவிலேயே இந்தியா முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாக மாறி விடும் என்கிறார்கள். இவ்வாறான கருத்துக்களையே இவ்வாறான வரைபடங்களின் துணையுடன் நிறுவுவதற்கு இவர்கள் முயற்சிக்கிறார்கள். உண்மைகளின் அடிப்படையிலான வாதங்களும், அறிவார்ந்த விவாதங்களும் இவர்களுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றன.
(தொடரும்)
முனைவர் தா.சந்திரகுரு